தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைகிறோமா? - காந்திய மக்கள் இயக்கம் விளக்கம்

webteam

காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்து கற்பனையானது என அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் குமரய்யா தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காந்திய மக்கள் இயக்கம், ''காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவை மாவட்ட இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 37 வருவாய் மாவட்டங்களைச் சேர்ந்த 85 நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழருவி மணியன் பங்கேற்றார். இந்தக் கூட்டம், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

அதனடிப்படையில், காந்தியமக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார். இயக்கத்தின் மாநில செயல் தலைவராக கோவையைச் சேர்ந்த டென்னிஸ் கோவில் பிள்ளையும், மாநிலத் துணைத் தலைவராக ஓகே டெக்ஸ் கந்தசாமியும் , மாநிலப் பொருளாளராக நாகராஜனும் நியமிக்கபட்டுள்ளனர். இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 3 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக அடுத்த 6 மாதங்களில் உயத்துவதற்கான களப்பணியை நிர்வாகக் குழு முனைப்புடன் செயல்படுத்தும். காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைப்பதாக வந்த செய்து கற்பனையானது. காந்திய மக்கள் இயக்கம் தனித்து இயங்கும். ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தின் தொடர்பு, சகோதர பாவத்துடன் நீடிக்கும்'' என தெரிவித்துள்ளது.