தமிழ்நாடு

புதுப்பொலிவு பெறுகிறது காந்தி நினைவு அருங்காட்சியகம் -ரூ 2.12 கோடி செலவில் பணிகள் துவக்கம்

webteam

ரூ 2.12 கோடி செலவில் காந்தி நினைவு அருங்காட்சியகம் புதுப்பொலிவு பெறுகிறது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் 300 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. காந்தி அருங்காட்சியக வளாகத்தில் கழிவறை, லிப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முதல் கட்டமாக 3 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மதுரை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 2 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 12 மாதங்களுக்குள் புனரமைக்க பணி திட்டமிடப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனம் புனரமைப்பு பணியே தற்போது துவக்கியுள்ளது.

இந்த பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் காந்தி அருங்காட்சியகத்தை எளிதில் பார்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்யப்படும் என ஏற்கனவே இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்த படி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் இன்று முதற்கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.