தமிழ்நாடு

கரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை

கரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை

webteam

கஜா புயல் வேதாரண்யம்-நாகை இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல், வேதாரண்யம்-நாகை இடையே கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி க்ரையை கடக்கும். அப்போது சுமார் 100 கி.மீ முதல் 120 கி.மீ வரை புயலின் வேகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னல் மற்றும் மழை பெய்து வருகிறது. 

தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 67,168 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 10,420 பேர், நாகையில் 44,087 பேர், ராமநாதபுரத்தில் 913 பேர், தஞ்சையில் 4,678 பேர், புதுக்கோட்டையில் 1,881 பேர் மற்றும் திருவாரூரில் 5,189 பேர் முகாம்களில் உள்ளனர். 

கஜா புயலின் போது செயல்படுவதற்காக பாதிப்பிற்குள்ளாகும் 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 289 முகாம்களில் 67,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர்கள் இரவிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.