கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காரைக்கால் விரைவு ரயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டார். அவருடன் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சென்றனர். இதனிடையே முதல்வர் சென்ற ரயில் மறைமலைநகர் அருகே சுமார் 45 நிமிடம் நிறுத்தப்பட்டது. சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் அருகே சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியதில் மாடு ஒன்று உயிரிழந்தது.
இதனையடுத்து மின்சார ரயிலுக்கு பின்னால் முதலமைச்சர் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டது. முதல்வர் சென்ற ரயில் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ரயிலில் சிக்கிய பசு மாட்டினை அகற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தற்போது நாளை சென்றடைந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்தில் ஆய்வை தொடங்கவுள்ளார். பின்னர் பிரதாப ராமபுரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து குடோன், வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம், பெரியகுதகை, வேதாரண்யம், வாய்மேடு, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யும் முதல்வர் பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்கிறார்.
கடந்த 20ஆம் தேதி தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்தார். கடந்த முறை முதல்வர் பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்றது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த முறை சாலை மார்க்கமாக அவர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.