புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இந்த மாதமே பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இருப்பினும் வீடு, உள்ளிட்ட உடைமைகள் முழுவதுமாக சேதடைந்துள்ளதால் மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாடுகின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இந்த மாதமே பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் செல்லுர் ராஜூ மற்றும் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. திருவாரூரில் உள்ள கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 3 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, அடுத்த மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் இந்த மாதமே வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.