கோவை  அரசு பேருந்து
கோவை அரசு பேருந்து File Image
தமிழ்நாடு

ஏசி பஸ்களில் எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுக்கு இலவச பயணம் - ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வெளியான உத்தரவு

PT WEB

குளிர்சாதன பேருந்துகளில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு கட்டணமில்லா பயணம், புகார் எழாத வகையில் பணியாற்றுமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழக சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.

BUSES

எனினும் நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை என இடையில் சில சர்ச்சைகள் எழுந்தநிலையில், இந்த உத்தரவு மீண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, துனைவி, கணவர் அல்லது ஓர் உதவியாளருடன் பேரவைச் செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.