தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசப் பயணம்: இன்று முதல் டோக்கன்

webteam

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய, இன்று முதல் டோக்கன்களைப் பெறலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் முதியவர்களுக்கு, இலவச பேருந்துப் பயண டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் கட்டணமில்லா பயண டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், டோக்கன் பெறுவதற்காக, போக்குவரத்து கழகத்தின் https://mtcbus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதிவாய்ந்த முதியவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களில் டோக்கன்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 21 பணிமனைகள் மற்றும்19 பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு 10 வீதம், ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே அடையாள அட்டை பெற்றோர், புதிதாக பெற விரும்புவர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.