செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
செய்யாறைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் தீபாவளி சீட்டு, மளிகை சீட்டு, மாத தவணை சீட்டு என பல்வேறு சீட்டுகளை சில ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முழுமையாக கட்டி முடித்தவர்களுக்கு அதற்கான பொருட்களும், பணமும் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பொருட்களை கொடுக்காமல் மோசடி செய்த நிலையில், அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்ததால் தற்போது பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கிளை அலுவலகத்திற்கு பணம் கட்டி ஏமாந்தவர்கள் வந்து பார்த்தபோது அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்துள்ளது.
இதனால் பணத்தை கட்டி ஏமாந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுப்பாக்கம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த பூந்தமல்லி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டுவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தால் உடன் வந்தவர்கள் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கபட்டவர்கள் கூறுகையில், “செய்யாறு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை திறந்து தீபாவளி சீட்டு, மாத சீட்டு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தது. இதில் 15 பேரை சேர்த்து விட்டால் ஒரு கார்டு இலவசம் என கூறியதன் பேரில் ஏராளமானோர் இந்த திட்டத்தில் பெண்களை சேர்த்து விட்டனர். காட்டுப்பாக்கத்தில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள்.
தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி பணத்தை திரும்ப தருவதற்கு உறுதி அளிக்க வேண்டும். தங்களை நம்பி இந்த சீட்டில் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை” என கூறினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.