தமிழ்நாடு

ஸ்ரீ சைதன்யா இண்டர்நேஷனல் பள்ளி பெயரில் மோசடி? - பெற்றோர், மாணவர்கள் போராட்டம்

kaleelrahman

பூவிருந்தவல்லி அருகே சிபிஎஸ்இ தனியார் பள்ளியை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பூவிருந்தவல்லி அருகே கோளப்பன்சேரியில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ சைதன்யா இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி. இந்த பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வெளியானதால் அதிர்ச்சி அடைந்தனார்.

மேலும் சைதன்யா பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யா பள்ளியில் படித்தது போன்று சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ சைதன்யா இண்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் பள்ளியை நடத்திவிட்டு, மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யா இண்டர்நேஷனல் பள்ளி சார்பில் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீ வித்யா பள்ளியின் தர மதிப்பால் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 70 சதவீதம் வரை தான் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது

“சைதன்யா பள்ளி என்றுதான் மாணவர்களை அதிக கட்டணம் செலுத்தி பள்ளியில் சேர்த்தோம். தற்போது ஸ்ரீ வித்யா பள்ளி தரத்திற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. சைதன்யா பள்ளிக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே சைதன்யா என்ற என்ற பெயரில் இருந்த பள்ளியின் பெயர் பலகையை பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக அகற்றியுள்ளது.