தமிழ்நாடு

மெர்சல் பட பாணியில் நூதன மோசடி: அரசு மருத்துவமனையில் தரகர்கள்

மெர்சல் பட பாணியில் நூதன மோசடி: அரசு மருத்துவமனையில் தரகர்கள்

webteam

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுற்றித்திரியும் தனியார் மருத்துவமனை தரகர்களின் வார்த்தை வலையில் சிக்கி ஏழை எளிய மக்கள் ஏமாறுகின்றனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்துகள் மற்றும் பிற நோய்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விபத்து ஒன்றில் சிக்கிய பொள்ளாச்சியை சேர்ந்த சந்திரசேகரனிடம் ஜான் என்கிற முருகன் என்பவர், தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக மூளைசலவை செய்துள்ளார். இதையறிந்த மருத்துவர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே, தரகர் முருகனை கைதுசெய்து விசாரித்தனர். அதில், அரசு மருத்துவமனை நோயாளிகளை மூளைச்சலவை செய்து தனியார் மருத்துவமனைக்கு பல ஆண்டுகளாக அனுப்பிவைத்தது தெரியவந்தது. நோயாளிகளில் சிலர் தாங்கள் ஏமாற்றப்படுவதை அறிந்து தப்பித்துக் கொண்டாலும், பலர் இதில் சிக்கிவிடுவதாகக் கூறுகிறார் கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர்.

இதனிடையே, தனியார் மருத்துவமனைகளின் தரகர்களிடம் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தரகர்களின் பேச்சை நம்பி தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளில் பலர், சிகிச்சைக்கான பணத்தை செலுத்த முடியாமல் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருப்பதே தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.