தமிழ்நாடு

டிஜிபியாக பதவி உயர்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழக அரசு உத்தரவு

டிஜிபியாக பதவி உயர்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழக அரசு உத்தரவு

நிவேதா ஜெகராஜா

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

தமிழக காவல்துறை சைபர் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான அம்ரீஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் பிரிவு டிஜிபியாகவே பணி தொடருவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைபோல, தாம்பரம் காவல் ஆணையராக உள்ள கூடுதல் டிஜிபியான ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராகவே பணியை தொடர உள்ளார் என்றும் ஏடிஜிபி அந்தஸ்தில் காவல் ஆணையர் பொறுப்பு செயல்பட்டு வருகிறது. அதனை உயர்த்தி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியான ஜெயந்த் முரளி டிஜிபியாக பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக பணி தொடர்வார். இந்த பதவிக்கான அந்தஸ்தும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைபோல கருணாசாகர் மத்திய அரசு பணியான காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மத்திய அரசு பணியை தொடர உள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது 1991-ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதால் தமிழக காவல்துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.