தமிழ்நாடு

திருமாவளவன் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக விஹெச்பி முன்னாள் பிரமுகர் கைது!

webteam

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் முன்னாள் சேலம் கோட்ட நிர்வாகியை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் முன்னாள் சேலம் கோட்ட செயலாளர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாகவும், அவரை கேலி செய்யும் விதமாகவும் பதிவிட்டு அதனை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பள்ளிபாளையம் போலீசார் இன்று காலை சபரிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சபரிநாதன் முகநூலில் அவதூறுக் கருத்து பதிவிட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார் சபரிநாதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் குறித்து தவறான தகவல் பரப்பியதாக ஆதன் மீடியா யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.