நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல மற்றும் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் சீமான் மீது அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களாக அறிவித்து வருகின்றனர். குறிப்பாக கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் சீமானே தன்னிச்சையாக முடிவெடுப்பதாக முக்கிய நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். கட்சியின் பொறுப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, கட்சியில் வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும் தொடர் குற்றசாட்டுகளை அடுக்கினர்.
இதுகுறித்து பேசிய சீமான், நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என்றார். மேலும், விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம், இல்லையென்றால் விலகிக்கொள்ளலாம் என பேசி இருந்தது நிர்வாகிகளை மேலும் கோபமடைய செய்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் எனும் அமைப்பை நடத்தி வரும் வெற்றிக்குமரன், புதுக்கோட்டை தனசேகரன், வழக்கறிஞர் தடா ராஜா, இயக்குநர் கார்வண்ணன், புகழேந்தி மாறன் ஆகியோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்கள் விரைவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் நாம் தமிழர் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் இவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏற்கனவே நிர்வாகிகள் விலகி வந்த நிலையில், தற்போது முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் வேல்முருகனை சந்தித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.