தமிழ்நாடு

மேம்பாலத்தின்மீது திடீரென கழன்ற கார் டயர் - நூலிழையில் தப்பிய முன்னாள் எம்.எல்.ஏ மகன்

Sinekadhara

மதுரையில் மேம்பால சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் தீடீரென கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மறைந்த முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் சங்கர் தனது காரில், டிவிஎஸ் நகரில் இருந்து காளவாசல் பைபாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, போடி லைன் மேம்பாலத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது சாலை இறக்கத்தில் பின்புற டயர் திடீரென கழன்று தனியாக வெளியே வந்தது. சுதாரித்துக் கொண்ட சங்கர் உடனடியாக வாகனத்தை நிறுத்திய நிலையில், காருக்குள்ளேயே சக்கரம் சிக்கியபடி நின்றது.

இதனால் மேம்பால பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து காரில் சக்கரம் பொருத்தப்பட்டு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது. பால இறக்கத்தில் காரின் சக்கரம் தனியாக கழன்று சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.