தமிழ்நாடு

வீடு, அலுவலகத்தில் ரெய்டு - முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மனு

வீடு, அலுவலகத்தில் ரெய்டு - முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மனு

webteam

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் எம்.எல்.ஏ ஆக உள்ளார். கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் முறைகேடு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், கணேஷ்குமார் என்பவர் அளித்த புகாரில் செந்தில் பாலாஜி கடந்த 2017 அக்டோபரில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று சென்னை, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அவரின் மந்தைவெளி இல்லத்திற்கு சீல் வைத்தனர். இந்த வழக்கில் அவர் கைதாக கூடும் என்பதால், முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தன்னுடைய பெயர் இல்லை. அரசியல் விரோதம் காரணமாக தன் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்தகட்டமாக என்னை கைது செய்ய கூடும். எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன் முறையிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன்ஜாமின் வழக்கை பிப்ரவரி 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.