முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியாளர்கள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, முந்தைய அரசின் உறுதிமொழி தம்மை கட்டுப்படுத்தாது என தற்போதைய தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் மேல் நடவடிக்கையை நிறுத்திவைப்பதால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, ஜூன் 23ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.