தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்?

Rasus

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் இருப்பவர்கள், பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இணையும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், கடந்த 2009-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். அப்போது இந்திய அளவில் 9-வது மாணவராகவும், தமிழக அளவில் முதல் மாணவராகவும் அவர் தேர்வாகி இருந்தார். அதன்பின்னர் கர்நாடகாவில் துணை ஆட்சியர், ஆட்சியர் என பலப்பொறுப்புகளில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, அவரை அரசாங்கம் பணியிட மாற்றம் செய்ய முயற்சி செய்தது. ஆனால் அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இத சசிகாந்த் செந்தில் மீது மக்கள் வைத்திருந்த பாசத்தை வெளிஉலகிற்கு காட்டும் விதத்தில் இருந்தது.

2017-ஆம் ஆண்டு தட்சின கன்னட மாவட்டத்தில் தொடர்சியாக இருதரப்பு மோதல் இருந்து வந்தது. அப்போது அதனை தடுக்க சசிகாந்த் செந்தில் அங்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சமூக நல்லிணக்க கூட்டம் நடத்தி இருதரப்பு மோதலை அவர் கச்சிதமாக தடுத்தார்.

இதனிடையே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டில் நடக்கும் சில சம்பவங்களை தன்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனக் கூறி அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன்பின் மத்திய பாஜக அரசை தொடர்ச்சியாக விமர்சித்தும் வந்தார்.

இந்நிலையில் சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நாளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.