சிவகங்கை
சிவகங்கை புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிவகங்கை: பெண் சிசுக்களை கருவிலேயே கொன்ற முன்னாள் அரசு செவிலியர் - ஐந்து ஆண்டுகளாக செய்தது அம்பலம்!

PT WEB

செய்தியாளர்:பிரசன்ன வெங்கடேசன்

அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்ததைத் தொடர்ந்து கருவில் இருப்பது பெண் குழந்தை தானா என்பதை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.

காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது காயத்ரிக்கு மூன்றாவது பெண் குழந்தை என உறுதி செய்யப்பட்டகிறது. இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு காந்திமதி அவரது வீட்டிலேயே வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து காயத்ரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது காயத்ரி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக பெண் சிசுக்களை கருவிலேயே கலைக்கும் பணியை செய்துவந்தது தெரியவந்துள்ளது.

காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலஷ்மி என்பவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காந்திமதியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.