தமிழ்நாடு

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நேரில் ஆஜராவாரா சசிகலா?

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: நேரில் ஆஜராவாரா சசிகலா?

Rasus

அந்நிய செலாவணிமோசடி வழக்கில், வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா ஆஜராவது குறித்து வரும் 4-ம் தேதி உத்தரவிடப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா மீதான அந்திய செலாவணி மோசடி வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜாகிர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார், சசிகலாவுக்கு முதுகுவலி இருப்பதால், பெங்களூருவில் இருந்து வெகுதூரம் பயணிக்க முடியாது என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படக் கூடிய சூழல் இருப்பதால், குற்றம் சாட்டப்படட சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜாகிர், இந்த வழக்கில் வரும் 4ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் வழக்கின் மற்றொரு குற்றவாளியான சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அடுத்த மாதம் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 1996ம் ஆண்டு, அப்போதிருந்த ஜெஜெ டிவிக்கு அப்லிங்க் வசதி ஏற்படுத்தியது, தொழிற்நுட்ப கருவிகள் வாடகைக்கு எடுத்த விவகாரத்தில் சசிகலா அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.