தமிழ்நாடு

சத்தியமங்கலம்: பழக்கடையில் பதுங்கியிருந்த உடும்பை பிடிதத வனத்துறையினர்

kaleelrahman

சத்தியமங்கலத்தில் பழக்கடைக்குள் பதுங்கியிருந்த உடும்பை மீட்ட வனத்துறையினர் அதை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இந்தக் கடையின் பின்புறம் உள்ள குடோனில் சுமார் மூன்று அடி நீளமுள்ள உடும்பு பதுங்கி படுத்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பழக்கடை உரிமையாளர், இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் பழக்கடைக்குச் சென்று பதுங்கியிருந்த உடும்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். பழக்கடைக்குள் உடும்பு பதுங்கியிருந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.