தமிழ்நாடு

24 குண்டுகள் முழங்க வன அதிகாரியின் உடல் தகனம்

Rasus

கர்நாடகாவில் யானை தாக்கி உயிரிழந்த இந்திய வன அதிகாரியின் உடல், தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய வனப்பணி அதிகாரி மணிகண்டன். கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார். ஒரு சிறு காட்டுத் தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவர் சென்றிருந்த போது ஒற்றை யானை ஒன்று அவரை பின்னாலிருந்து தாக்கியதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கடந்த 2001ம் ஆண்டில் வனப்பணியில் சேர்ந்த மணிகண்டனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சொந்த ஊரான கம்பத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு இந்திய வனப் பணி அதிகாரிகள், வனத்துறையினரும் மரியாதை செலுத்தினர். பின்னர், தொட்டாந்துறையில் உள்ள மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, தேனி மாவட்ட காவல் துறையினர் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய பிறகு, உடல் தகனம் செய்யப்பட்டது.