தமிழ்நாடு

“வனப்பகுதி விலங்குகளுக்கே, கொடியவர்களுக்கு அல்ல” - உயர்நீதிமன்றம்

webteam

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்குத்தான் அவற்றை விட கொடியவர்களுக்கு அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூரில் வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயில் உள்ளது. இங்கு கார்த்திகை மகாதீபத்தையொட்டி டிசம்பர் 10 முதல் 12 வரை மகா தீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதிகோரி திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கார்த்திகை மகாதீபத்தையொட்டி பக்தர்களை அழைத்து செல்ல ஏதுவாக அணையா தீபக்குழு அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக பக்தர்களை அழைத்து சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.

2015 முதல் வனத்துறை அனுமதிபெற்று கோயிலுக்கு சென்றுவரும் நிலையில், இந்த ஆண்டு மகாதீபம் ஏற்றவும், பூஜைகள் செய்யவும் அனுமதிகோரி கடந்த ஆகஸ்ட் 20ல் அரசுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால் மனு தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு, வனத்துறை, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இதற்கிடையே வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டும் தானே தவிர, அவற்றை விட கொடியவர்களுக்கு கிடையாது எனக் கூறினர்.