தமிழ்நாடு

குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை மக்கள் சத்தத்தால் மீண்டும் வனப்பகுதிக்கே ஓடும் காட்சி!

webteam

ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக் கோட்டத்தில் சிறுத்தை புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தை புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன.

இந்த நிலையில் ஆசனூர் அடுத்த பங்களா தொட்டி கிராமத்தில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அங்குள்ள ஆரோக்கியசாமி என்பவரது வீட்டுக்குள் புகுந்து கால்நடைகளை தேடியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்து செல்வதை பார்த்து சத்தம் போட்டனர்.

இதனால் பயந்து போன சிறுத்தை, வந்த வேகத்தில் திரும்பிப் போனது. இந்த நிகழ்வுகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுத்தை குடியிருப்புக்குள் புகும் சிசிடிவி காட்சியை வைத்து வனத் துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து இரவு நேரத்தில் மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.