நீலகிரியில் பிடிக்கப்பட்ட பெண் சிறுத்தையை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கைவட்டா பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை நுழைந்தது. இதனை தகவலறிந்து வந்த வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் ஆய்வு செய்ததில் சிறுத்தைக்கு முதுகு, வயிறு மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. சிறுத்தைக்கு கடந்த 6 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, சிறுத்தையின் உடலில் இருந்த காயங்கள் குணமாகி வருகிறது.
இந்த நிலையில் சிறுத்தையின் உடல்நிலை, வயது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதனை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். சிறுத்தையின் உடலில் உள்ள காயங்கள் முழுவதுமாக குணமாக மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் அதனை வனப்பகுதியில் விட்டால் அதனால் வேட்டையாட முடியாமல் உயிர் இழக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிப்பதே பாதுகாப்பாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.