தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து விபத்து : ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்

webteam

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வாழும் இந்தியரான மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோஷிகா ஆகியோருடன் ஒகேனக்கல் வந்துள்ளார். இவர்கள் இன்று காலை பரிசலில் செல்ல விரும்பினர். முசல் மருவு என்ற இடத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி இவர்கள் மனோகரன் என்பவரின் பரிசலில் பயணித்தனர்.

அவர்களுடன் கார் ஓட்டுநர் கந்தனும் சென்றுள்ளார். அவர்கள் சென்ற பரிசல் நீலகிரி பிளேட் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பரிசலில் பயணம் செய்த அஞ்சலாட்சி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். மனோ, அவரது மகள் மோஷிகா, கார் ஓட்டுநர் கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து ஆற்றில் தத்தளித்தபடி இருந்தனர். அவர்களை பரிசல் ஓட்டி மனோகரன் மீட்டு கரை சேர்த்தார். தடையை மீறி பரிசல் இயக்கியதால் பரிசல் ஓட்டி மனோகரன் கைது செய்யப்பட்டார்.