தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

webteam

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் வெளிநாட்டு பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் விக்கி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வர அவரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில், அவர் வைத்திருந்த பையில் குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் பயணி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குண்ட்ரடா வாசு (43) என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 17 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் குறித்து துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அங்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆய்வு செய்து பணத்தை துறைமுகம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.