தமிழ்நாடு

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவம் முடிந்து 2 ஆண்டுகளாகியும் சீர் செய்யப்படாத நடைபாதை

Sinekadhara

அத்திவரதர் வைபவத்தின்போது மக்கள் வெள்ளத்தில் சிதைந்துபோன நடைபாதை இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ளது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் அலைமோதியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர், 1979-ஆம் ஆண்டு ஜூலை, 2-ல் எழுந்தருளினார். அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. அதன்பிறகு, 40 ஆண்டுகள் கழித்து கடந்த 2019-ஆம் ஆண்டு மீண்டும் அத்திவரதர் எழுந்தருளினார். 2019-ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டார்.

குடியரசுத்தலைவர் முதல் சாமானிய மக்கள் வரை கோடிக்கணக்கானோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தின்போது மக்களின் பெருவெள்ளத்தில் சரிந்து விழுந்த பாதசாரி தூண்கள் இன்னும் சீர் செய்யப்படாமல் அப்படியே கிடக்கின்றன. பாரம்பரிய நகரத்தின்கீழ் காஞ்சிபுரம் நகரை மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான பிரசித்திப்பெற்ற கோயில்களில் இருக்கக்கூடிய பாரம்பரியம் மாறாமல் அதனை பராமரிக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் வரதராஜ பெருமாள் கோயில் சுற்று இருக்கக்கூடிய மாடவீதிகளில் பாரம்பரியம் மாறாமல் சுற்றுலாவாசிகள் சௌகரியத்திற்காக போடப்பட்ட நடைபாதை அத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் சிதைந்து போனது. ஏறத்தாழ நூற்றுக்கணக்கான தூண்கள் கூட்ட நெரிசலில் கீழே விழுந்தன. தற்போது அத்திவரதர் வைபவம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் கீழே சரிந்து விழுந்த தூண்களை சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. கோயில் நகரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுவட்டார பகுதி சிதைந்து போய் இருப்பது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.