தமிழ்நாடு

சிரிஞ்சி வடிவில் விற்கப்படும் சாக்லெட்களில் போதை வஸ்து? - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சங்கீதா

சென்னையில் ஊசி (சிரிஞ்சி) வடிவில் விற்கப்படும் சாக்லெட்களில் போதை வஸ்து கலந்துள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிரிஞ்சி வடிவிலான சாக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவை தயாரிப்பு தேதியின்றி இருப்பதால் சந்தேகம் உள்ளதாக காவல்துறை அளித்த தகவல் அளித்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறையினர், சாக்லெட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கிடங்கில் சோதனையிட்டனர்.

அப்போது அங்கிருந்த பிஸ்கட், ஜெல்லி ஜூஸ், சாக்லேட் மற்றும் ஊசி வடிவிலான சாக்லெட் இருப்பதும், அவை தயாரிப்பு தேதியின்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் சிரிஞ்சில் சாக்லெட் இருப்பதால், அதில் போதை வஸ்து கலந்து இருக்குமா என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

மேலும் அந்த சிரிஞ்சிகள் கொரோனா காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டவையா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறையினர், இவை அனைத்தையும் தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என கூறினர். ஆய்வறிக்கை வந்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனவும், சிரஞ்சி சாக்லெட்கள் மும்பையில் தயாரிக்கப்பட்டு இங்கு வருவதால், அது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.