தமிழ்நாடு

வடபழனி முருகன் கோயிலில் தரமற்ற பிரசாத பொருட்கள்? சோதனை முடிவு சொல்வது என்ன?

Sinekadhara

வடபழனி முருகன் கோயிலில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் லட்டு உட்பட பிரசாத பொருட்கள் தரமின்றி விற்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. லட்டு, தட்டுவடை முறுக்கு போன்ற உணவுப் பொருட்களில் தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டதால் அனைத்தையும் பறிமுதல் செய்து ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

சென்னை வடபழனி தண்டாயுதபாணி கோயிலில் இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். வடபழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. லட்டு, தட்டு வடை, முறுக்கு போன்ற பொருட்களில் தரம் மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி குறித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது லட்டு, முறுக்கு போன்ற பொருட்களின் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் பயன்படுத்த வேண்டிய இறுதி தேதி போன்றவை விவரங்கள் உணவுப் பொருட்களில் சரியாக குறிப்பிடப்படாமல் இருந்தது.

இதனால் விற்பனையகத்தில் விற்பனைக்கு வைத்திருந்த பிரசாத பொருட்கள் அனைத்தையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த உணவுப்பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முழுமையாக உணவு தர பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் விற்பனை செய்யப்பட்டது தரமான உணவுப் பொருட்களாக இல்லை எனக் கண்டறியப்பட்டால் தயாரிப்பு நிறுவனம் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் முக்கியத்தளமாக விளங்கும் வடபழனி முருகன் கோயிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவு தர சோதனையில் ஈடுபட்டது காலையில் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.