சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. போரூரில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சித்த மருத்துவமனையை தொடங்கி வைத்து சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனியார் மண்டபங்கள், காலி இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் 36வது சித்த மருத்துவமனையாக 70 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.
மதுரவாயல் எம்.எல்.ஏ.கணபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, `36வது சித்த மருத்துவமனை இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, சிகிச்சை பெறுபவர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படும், எல்லா மாவட்டங்களிலும் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 600-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது.
கோவையில் தடுப்பூசி போடுவதில் பாரபட்சம் காட்டுவதாக சமூக வலைதளங்களில் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு முலம் இதுவரை 78 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. 71 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. 6 சதவீதம் விரயம் செய்யப்பட்டு விட்டது. கோவையில் மட்டும் 5 லட்சத்து 4370 ஊசிகள் போட்டுள்ளோம்.
சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இணைய தளத்தில் எந்த மாவட்டத்திற்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்படுள்ளது என்பதை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம், வானதி சீனிவாசன் எவ்வளவு தடுப்பூசி வந்தது அதனை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக வலைதளம் மூலம் கேட்டுள்ளார். அதற்குரிய பதிலாக கூட இதனை எடுத்துக் கொள்ளலாம், எந்த வயதினருக்கான தடுப்பூசியும் கோவைக்கும் அனுப்பி வைக்கப்படும், இந்த அரசு வெளிப்படை தன்மையான அரசு, மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவில் மத்திய அரசு 14.4 சதவீதம் குஜராத்துக்கும், தமிழகத்திற்கு 6.4 சதவீதம் மட்டும் தடுப்பூசி தந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு இன்னொரு செய்தி, ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணி எந்த விதத்திலும் பாதிக்காது. அடுத்த அலைகள் வந்தாலும் அதனை தடுக்க 100 மருத்துவமனைகள் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என தெரிவித்தார