தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகளை மீட்ட தீயணைப்புத் துறை

webteam

பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதியுற்றனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறு மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வகையில் நேற்று இரவு முழுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் கனழை பெய்தது. இதனால் கல்லாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால் நோயாளிகள் அவதியுற்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்ட நோயாளிகள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.