தமிழ்நாடு

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தரைப்பாலம் - போக்குவரத்துக்கு தடை விதிப்பு

webteam

கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திருவள்ளூரில் இருந்து சுங்குவாசத்திரம் செல்லும் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையில் பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பெய்துவரும் பருவமழையால் கூவம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி, கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவாசத்திரம், காஞ்சிபுரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் செல்லும முக்கிய சாலையாக உள்ளது. இந்நிலையில், தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் இருபுறமும் தடுப்புகளை வைத்து காவல்துறையினர் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.