தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை:வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

JustinDurai

உளுந்தூர்பேட்டை அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையின் இடையே நரியன்ஓடை பகுதியில் 100 மீட்டர் அளவில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நரியன்ஓடையில் வெள்ளப் பெருக்கெடுத்து தண்ணீர் வரும்போது இந்தப்பாலம் மூழ்கிவிடும்.

இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் காரணமாக நேற்று நள்ளிரவு மேட்டுக்குப்பம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வயல்வெளிப் பகுதிகளில் தேங்கிய தண்ணீர், நரியின் ஓடையை  வந்து தரை பாலத்தை மூழ்கடித்தது. சுமார் 4 அடி உயரத்திற்கு இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் மெல்ல பெருக்கெடுத்து ஓடுவதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மேட்டுக்குப்பம் ஆலடி, பாலக்கொல்லை, மணக்கொல்லை, உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மழையின் பொழுதும் இந்த நிலை நீடித்து வருவதால் மேட்டுக்குப்பம் நரியின்ஓடை தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.