தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்

webteam

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிநாதன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். 

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிநாதன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் எனக் கூறி இந்த 5 பேரையும் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

முன்னதாக, மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது தொடர்ந்து ஐவரும் நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொலி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டு வந்தனர். கோவை மத்திய சிறையில் கூட சக சிறை கைதிகளால் தாக்கப்படக்கூடாது என்பதற்காக இவர்கள் 5 பேரும் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள சிபிஐ, விரைவில் 2வது குற்றப்பத்திரிகையான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.