தமிழ்நாடு

கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் - காரணம் என்ன?

webteam

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 21 ஆம் தேதி மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப் படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஜான் மடிக்கட்டுமிடத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள ஆறு மீனவர்களை விடுதலை செய்து படகை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.