தமிழ்நாடு

கடல் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்

webteam

புதுச்சேரி மற்றும் நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஏராளமான படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 

இதேபோன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியிலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த காற்றுடன் சீற்றம் காணப்படுகிறது. எனவே ஆறுகாட்டுத்துறை‌ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 150க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.