30 நாட்கள் பரோல் முடிவதற்குள் ராஜிவ் கொலை வழக்கில் 7 பேரும் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக நளினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நளினியின் கோரிக்கையாடுத்து ஜூலை 5-ஆம் தேதி (இன்று) மதியம் 2 மணி 15 நிமிடத்திற்கு நளினியை ஆஜர்ப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று மதியம் நளினி நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் வாதாடினார். அப்போது “தானும் தன்னுடைய கணவரும் 28 ஆண்டுகளாக சிறையில் தான் உள்ளோம். எங்களுக்கு சிறையில் தான் பெண் குழந்தை பிறந்தது. எனது மகளை பாராட்டி சீராட்டி நான் வளர்க்கவில்லை. வீட்டில் உள்ள பெரியோர்கள் தான் அவளை வளர்த்து வருகின்றனர். தற்போது தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்க ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தனக்கு 6 மாதம் பரோல் வழங்க வேண்டும்” என்றார். பின்னர் நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இதுதொடர்பாக பேட்டியளித்த நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்ற நீதிபதிகளின் உத்தரவு திருப்தி அளிக்கிறது. நீதிபதிகள் முன்பு ஆஜராகி தனக்காக வாதிடும் வாய்ப்பு எந்த ஆயுள் கைதிக்கும், இதுவரை எந்த நீதிமன்றத்திலும் வழங்கப்படவில்லை. பரோல் முடியும் இந்த 30 நாட்களுக்குள் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரும் விடுதலையாவர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.