தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்தித்த தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதற்கான, பதவியேற்பு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விஜயுடன் சேர்த்து ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து, நேற்று மாலை சோழவந்தான் தொகுதி (தனி) எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். தமிழக வெற்றிக் கழகம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க மே-13 ஆம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ள சூழலில் தான், இன்று காலை 9.30 மணிக்கு 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடுகிறது. இதில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 108 எம்.எல்.ஏ-க்களும், திமுக சார்பில் 59 எம்.எல்.ஏ-க்களும், அதிமுக சார்பில் 47 எம்.எல்.ஏ-க்களும் வெற்றி பெற்றிருந்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் - 5, பாமக -4, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்ல் ஆகிய கட்சிகள் தலா இரண்டு, பாஜக, தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் தலா 1 எம்.எல்.ஏ-வும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2லும் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருக்கும் சூழலில், தவெகவில் தற்போது 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்.