தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பரிதாப உயிரிழப்பு

webteam

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். வழக்கம் போல் இன்று பணியில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த போது, திடிரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு பட்டாசுகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வே காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் கூறும் போது, “ இந்த தீ விபத்தில் பெண் உட்பட 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு விட்டது. காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியும் நடைபெற்று வருகிறது.” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறும் போது, “ஆலை முறையான உரிமம் பெற்று இயங்குகிறது. மற்ற விபரங்கள் ஆய்வுக்கு பிறகு தான் தெரியவரும்” என்றார்.