தமிழ்நாடு

ஆம்பூர்: காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – போராடி தீயை அணைத்த வீரர்கள்

webteam

ஆம்பூர் அருகே பரிதா குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 13 தீயணைப்பு வாகனங்கள் விடிய விடிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் பரிதா குழுமத்திற்குச் சொந்தமான (பரிதா ஷூ பிரைவேட் லிமிடெட் பாம்ஸ் யூனிட்) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சாண்டல்ஸ் மற்றும் செப்பல்ஸ் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள குடோனில் இருந்து கருப்பு புகையுடன் தீப்பற்றி எரிந்து வருவதை அறிந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து குடோன் முழுவதும் தீ மளமளவென பரவியது.

இதையடுத்து ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தொழிற்சாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான காலணி உதிரி பாகங்கள், மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் தொழிற்சாலைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உம்ராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.