ஸ்டாலின், வெள்ளம்
ஸ்டாலின், வெள்ளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தனிநபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை - முழுவிபரம்!

Prakash J

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியாயவிலை கடைகள் மூலம் இத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும், 33%க்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.37,500ம், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க பரிசீலனை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதுபோல் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தனிநபர் குடும்ப அட்டைக்கும் நிவாரணம் வழங்க பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.