love marriage
love marriage pt desk
தமிழ்நாடு

டும் டும் டும்: பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்.. தமிழக மாப்பிள்ளை! தமிழ் முறைப்படி நடைபெற்ற காதல் திருமணம்

webteam

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்றுள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே வசித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஈவிலின் கோப்பைல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இந்த நிலையில் கலையரசன் வேலை மாற்றம் காரணமாக கடந்த 2021-ல் சென்னைக்கு திரும்பினார். இருந்த போதிலும் முகநூல், வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதள செயலி மூலம் இவர்களது காதலும் தொடர்ந்தது.

love marriage

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்களின் பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர். அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதல் ஜோடி, முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதுவும் தமிழர் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஈவிலின் கோப்பைல் விரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு கலாச்சாரப்படி சட்டரீதியாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருமண பதிவு செய்தார். பின்னர் பட்டுசேலை, நகைகள் அணிந்து மணமகள் மணமேடையில் அமர்ந்து இருந்த நிலையில், வேத மந்திரங்கள் முழங்க மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

அப்போது அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், மணமகள் பெற்றோர் வர முடியாததால் அவர்களுக்கு முகநூல் மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. அவர்கள் இணையதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். தேசம் கடந்து மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளதை பார்த்து, அவர்களது உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக தமிழ் முறைப்படி திருமணம் என்றால் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் இரு குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து உறவினர்களுடன் திருமணத்தை நடத்தி மகிழ்வவர். ஆனால் இவர்களுடைய காதல் ஒரு வித்தியாசமானது. ஈவிலின் கோப்பைல் தான் காதலித்தவர் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தும் ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு காதலுக்காக இவரை திருமணம் செய்து உள்ளார்.

love marriage

இந்த திருமணத்திற்கு திருமண பெண் ஈவ்லின் பெற்றோர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்திய வருவதற்கு விசா கிடைக்கவில்லை. ஆனால், காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணுக்கு மட்டும் விசா கொடுத்து விடுங்கள் என முயற்சி செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த திருமணத்தில் மாப்பிள்ளை சொந்தங்களுடன் கலந்து கொண்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு இங்கு யாரும் இல்லை என்று கவலைப்படாத அளவிற்கு மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தாங்கள் பெண்ணின் சொந்தம் எனக் கூறி கடல் கடந்து வந்த பெண்ணின் கண்கலங்க (ஆனந்த கண்ணீர்) திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.