தமிழ்நாடு

பழம் வாங்குவதில் பிரச்னை: அரசு மருத்துவமனை சூறை

webteam

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பழம் வாங்கிய போது ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து அரசு மருத்துவமனை சூறையாடப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தில் பழக்கடை நடத்தி வருபவர் முருகன். இவரிடம் மந்தைவெளி பகுதியை சேர்ந்த ராதாமணி என்பவர் உட்பட 3 பேர் பழம் வாங்கிய போது பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த முருகன், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராதாமணி தரப்பினர் முருகனிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் இரு தரப்பிலும் 18 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையின் புற நோயாளி பிரிவு அடித்து நொறுக்கப்பட்டு மருத்துவ உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. மருத்துவமனைக்குள் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் நோயாளிகள் அச்சத்தில் உறைந்தனர். 
இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் டிஎஸ்பி பொன்.கார்த்திக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டு தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.