வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஃபெஞ்சல் புயலாக உருமாறியது. புயலைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர் முதலிய பல்வேறு மாவாட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுபட்டன.
முதலில் புயலானது இன்று பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் புயல் இடம் மாறி நகர்ந்ததால் மரக்காணம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில் மாமல்லபுரத்தின் அருகே புயல் நெருங்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வானிலை மையம் அளித்திருக்கும் தகவலின் படி, சென்னையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகில் 50கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாகவும், அது மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மாலையே புயல் கரையை கடக்கும் எனவும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் என கூறப்படுவதால், 13 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.