உடலில் ஏற்பட்ட காயம் ஆறாததால் கோவை மாவட்டம் வால்பாறையில் 30 வயதுடைய பெண் யானை ஒன்று உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவு போட்ட நாட்களில் இருந்து மக்கள் நடமாட்டம் குறைந்து இருப்பதால் வனவிலங்குகள் ஆங்கங்கே குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில், வால்பாறை அருகே தோணிமுடி எஸ்டேட் 12 வது தேயிலை தோட்டப் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வந்ததையடுத்து மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உடலில் காயங்களுடன் யானை ஒன்று இறந்து கிடந்ததை மாவட்ட வனத்துறை மருத்துவர் தலைமையில் புலிகள் காப்பகம் இணை இயக்குனர் சேவியர் ஆய்வு செய்தர். ஆய்வில் யானை காயங்களுடன் இறந்திருப்பது தெரியவந்தது
உயிரிழந்தது பெண் யானை என்றும் வயது 30 என்றும் யானைகளுக்கு இடையே சண்டை போடும் பொழுது காயப்பட்டு உணவு அருந்த முடியாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யானையை உடற்கூறு ஆய்வு செய்து ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டிப் புதைத்தனர்.