தமிழ்நாடு

தொழுகைக்கு அழைத்த தந்தை: ஆத்திரத்தில் கழுத்தை வெட்டிக் கொலை செய்த மகன்

kaleelrahman

ஆற்காடு அருகே தொழுகைக்கு அழைத்த தந்தையின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் (70). பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுப்பட்டு வந்த இவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதையடுத்து இரண்டு மகள் மற்றும் மூத்த மகன் வெளியூரில் உள்ள நிலையில், கடைசி மகன் இம்ரான் மட்டும் தந்தை இக்பாலுடன் வேப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இம்ரான் தனது தாய் மறைவிற்குப் பிறகு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்பால் தனது மகன் இம்ரானை தொழுகைக்குச் செல்ல வருமாறு கூறியுள்ளார். ஏற்கனவே மன குழப்பதில் இருந்த இம்ரான் கடும் கோபத்தோடு அதற்கு மறுத்துள்ளார். தொடர்ந்து இக்பால் இம்ரானை தொழுகைக்கு செல்ல வலியுறுத்தியால் ஆத்திரம் அடைந்த இம்ரான் தனது தந்தை இக்பாலை வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் ஆற்காடு நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இம்ரானை கைது செய்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்