தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தாயின் 2வது கணவர் போக்சோவில் கைது

webteam

திருவாரூரில் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கமலாபுரத்தை சேர்ந்த சித்ரா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சித்ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்த நிலையில் ஒருமகள் இருந்துள்ளார். சின்னப்பாவிற்கும் சித்ராவிற்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சித்ராவின் 17 வயது உடைய மகளுக்கு சின்னப்பா அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சித்ராவின் மகளை சின்னப்பா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்ராவின் மகள் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்தச் சிறுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சித்ராவின் மகள் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சின்னப்பாவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.