சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 38). இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பது மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தன் ஏழு வயது மகள் ஸ்டெபிரோஸ்சை அழைத்துக் கொண்டு ஆலந்தூர் எம்கேஎச் சாலையில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சதீஷ் தன் அக்கா கெசியா என்பவருக்கு போன் செய்து தான் ஆலந்தூர் விஜய் பார்க் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், தனது மகள் ஸ்டெபி ரோஸை கொலை செய்து விட்டேன் என்றும் தானும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்..
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகோதரி கெசியா உடனே ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு ஓட்டலுக்கு விரைந்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டல் அலுவலர் மற்றும் கெசியா இருவரும் சதீஷ் தங்கியிருந்த அறையை (213) திறந்து பார்த்த போது, சதீஷ் தன் மகளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
உடனே உயிருக்கு போராடிய சதீஷ்சை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து சதீஷ் சகோதரி கெசியா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், பரங்கிமலை போலீஸார் விரைந்து சென்று குழந்தை ஸ்டெபிரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
முதற்கட்ட விசாரணையில் சதீஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது .
மேலும் மகள் ஸ்டெபி கடந்த ஓராண்டாக சதீஷ் உடன் வசித்து வந்த நிலையில், தற்போது குழந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது மனைவி தொடர்ந்து பிரச்னை செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ் மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என்ற எண்ணத்தில், நேற்று இரவு ஓட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கி அதிகாலை மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது..
இருப்பினும் போலீஸார் இது குறித்து சதீஷ் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..