தமிழ்நாடு

வாணியம்பாடி: பட்டாசு கடையில் தீடீர் தீ விபத்து... 12 வயது மகனுடன் தந்தையும் பலியான சோகம்

webteam

வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருவர் பலத்த தீக்காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீராம் பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல குமார் பட்டாசு கடையிற்கு தன்னுடைய குழந்தையுடன் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக பட்டாசுகடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்தில் கடையின் உரிமையாளர் குமார் (45) மற்றும் அவருடைய மகன் தயாமூர்த்தி (12) இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் பட்டாசு கடையிற்கு சென்ற வேலாயுதம், ராமன் ஆகிய இருவர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தொடர்ந்து தீயை அணைக்க நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் போராடினர். பெரும் போராட்டத்துக்குப்பின் அவர்கள் தீயை அணைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பலூர் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.