தமிழ்நாடு

‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து

webteam

சமுதாய கூடத்தில் மது குடிப்பதை தட்டிக்கேட்ட தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவத்தில் இரண்டு பேரை ஓமலூர் போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமோகன். இவரது மகன் மோகன். இருவரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள். நே‌ற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தின் மேற்கூரை மீது அமர்ந்து மது அருந்திய கும்பல் ஒன்று, ராஜமோகன் வீட்டின் மீது பாட்டில்களை வீசியுள்ளது. இதனை ராஜமோகனும் அவரது மகனும் தட்டிக்கேட்டுள்ளனர். 

அப்போது அந்த கும்பல், வீட்டுக்குள் சென்று மோகனை கத்தியால் வெட்டியது. தடுக்க வந்த அவரது தந்தையையும் போதைக் கும்பல் வெட்டியது. மயங்கி விழுந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய பச்சனம்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார், முத்துக்குமார், விஜய், தினேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தலைமறைவாக இருந்த அசோக்குமார், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.